
posted 16th November 2021
மண்முனைதென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 15.11.2021 அன்று பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரரினால் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை மத்திய அரசு பார்வையாளராக இருந்து பார்க்கப் போகின்றதா? இது நியாயமா? என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இ பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப். இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைதென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. இதற்கு பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், ஏனைய திட்டமிடல் பிரிவு, கிராமசேவையாளர்கள் ஏனைய அனைத்து பிரிவுகளைச் சார்ந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் சிறப்பான செயற்பாடே காரணமாகும்.
இப் பிரதேச செயலகத்தைப் பொறுத்தவரையில் குறித்த பௌத்தமத குருவினால் பல தடவைகள் பிரதேச செயலாளர், உதவி பிரதேசசெயலாளர், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பௌத்தமதகுரு முறைமைக்கு மாறாக இவ் அச்சுறுத்தல் பண்ணி வருவது அரச நிருவாகத்தை சிறப்பாக செயற்படாமல் தடுப்பதற்கான செயற்பாடாகும்.
இப்பிரதேச மக்களைப் பொறுத்தவரையில் பௌத்த மத குருவிற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால், இம் மக்கள், உத்தியோகத்தர்கள் இம் மத குருவின் செயற்பாடுகளை வெறுகிக்கின்றனர். இம் மத குருவின் செயற்பாட்டால் இப் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களும் இப்பிரதேச மக்களும் விரக்தி அடைகின்றனர்.
எனவே பௌத்த சாசன அமைச்சு இவரை இடமாற்றம் செய்வதோடு, இவருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் இதுவரை சிறப்பாக செயற்பட்டு கொண்டு வரும் அரச உத்தியோகத்தர்கள் அரச நிருவாக செயற்பாடுகளில் நலிவடைந்து போவார்கள்.
எனவே இவரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதோடு, விரைவாக இவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இப் பிரதேச மக்களும்இ இப்பிரதேச உத்தியோகத்தர்களும் ஒரு முடிவிற்கு வரவேண்டிய சூழல் ஏற்படும்.

ஏ.எல்.எம்.சலீம்