இழுபறிக்குத் தீர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பதில் எழுந்திருந்த இழுபறி நிலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடன் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்வு எட்டப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபையில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், மாநகர சபையின் கணக்காளர் எம்.எம்.ரியாஸ், கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாட்டிறைச்சியின் விலை முறையற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டிருப்பதால், மக்கள் அதனைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதை கருத்தில் கொண்டு, 01 கிலோ கிராம் மாட்டிறைச்சி (200 கிராம் எலும்பு அடங்கலாக) 1600 ரூபாவுக்கும் தனி இறைச்சி 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என முதல்வரினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்டுப்பாட்டு விலையை அமுல்நடத்துவதில் மாநகர சபைக்கும் இறைச்சிக் கடைக்காரர்களுக்குமிடையே இழுபறி காணப்பட்டு வந்தது. இதனால் பெரும்பாலான இறைச்சிக்கடைகள் 06ஆம் திகதி சனிக்கிழமை முதல் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன.

இந்நிலையில், மாட்டிறைச்சி வியாபாரிகளையும் மாடு விநியோகஸ்தர்களையும் செவ்வாயன்று மாநகர சபைக்கு அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களையடுத்து 01 கிலோ கிராம் மாட்டிறைச்சி (200 கிராம் எலும்பு அடங்கலாக) 1700 ரூபாவுக்கும் தனி இறைச்சி 1900 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், கட்டாயம் டிஜிட்டல் தராசை கட்டாயம் பயன்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மீறுவோரின் இறைச்சிக்கடை வியாபார உரிமம் இரத்து செய்யப்படும் என இதன்போது முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இழுபறிக்குத் தீர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)