
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இளைஞர் கடத்தப்பட்டு தாக்குதல் சந்தேகத்தில் 7 இளைஞர்கள் கைது
வவுனியா இளைஞன் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 7 பேர் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டனர். அத்துடன், 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கடந்த வியாழக்கிழமை (08) அதிகாலை வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த இளைஞர் கடந்த புதன்கிழமை (07) தனது வீட்டில் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடினார். இதன்போது, இளைஞர்கள் சிலர் சேர்ந்து மதுவும் அருந்தியுள்ளனர். இந்த நிலையில், அங்கு வந்த இளைஞரின் பெண் நண்பர்களுடன் மது அருந்தியிருந்த இளைஞர்கள் நடனமாட முற்பட்டனர். இதனை குறித்த இளைஞர் தடுத்துள்ளார்.
இதையடுத்து, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (08) அதிகாலை மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை கடத்திச் சென்று பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 20 - 22 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்களிடம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)