Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

இளைஞன் மரணத்துக்கு நீதி கோரி மல்லாவியில் நேற்று ஆர்ப்பாட்டம்

இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி மல்லாவிப் பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர் சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நேற்று (16) வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்டன.

கனடா செல்ல தயாரான மல்லாவி யோகபுரம் பகுதியினைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞன் கடந்த 29 ஆம் திகதி காணாமல்போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார்.

19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸாரின் விசாரணைகள் மந்த கதியில் நடப்பதாக கூறியும், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரியும் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் நேற்று (16) இந்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டிருந்தது.

மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி மல்லாவி போலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி,

"சஜீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்"

"கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து"

"விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா"

"எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்"

"வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா"

"எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் "

போன்ற எதிர்ப்பு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்.

இதேவேளை, குறித்த போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று (16) மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றை தாம் மேற்கொள்வோம் என்றும், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும்,வருகை தந்திருந்த பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)