அம்பாறையில் சுதந்திர தினம் - தேசியக் கொடி விற்பனை அமோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி சிறப்பாகக் கொண்டாடப்பட விருக்கின்றது.

இதற்கமைய அம்பாறை மாவட்ட ரீதியான பிரதான கொண்டாட்ட நிகழ்வுகள் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை கோலாகலமாக இடம்பெறவுள்ளன.

75 ஆவது பெருமை மிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக மேற்படி மாவட்ட பிரதான கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தலைமையில், காலை 7.30 மணியிலிருந்து அம்பாறை இங்கினியாகல வீதியின் அம்பாறை ஆற்றோரம் இந்த மாவட்ட பிரதான கொண்டாட்ட நிழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த பிரதான நிகழ்வில் பாதுகாப்பு பிரிவின் தலைவர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொள்வார்களென அம்பாறை மாவட்ட செயலக சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டிலும் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பிரதான பள்ளிவாசல்களில் சுதந்திர தினத்தையொட்டி விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக அரசின் கோரிக்கைப்படி பள்ளிவாசல் முன்றல்களிலும் கடந்த முதலாம் திகதி முதல் இலங்கையின் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதான வீதிகளில் தற்சமயம் இலங்கையின் தேசிய கொடிகளை விற்பனை செய்வதிலும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறையில் சுதந்திர தினம் - தேசியக் கொடி விற்பனை அமோகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)