
posted 19th October 2021
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சிறப்பாக நடைபெற்றது.
கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலமை காரணமாக மிக அமைதியான முறையிலும், கொவிட் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.
இதற்கு அமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் மீலாத்தின சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.
மாவட்டத்தின் முக்கிய மாநகரமான கல்முனை மாநகரின் பஸார் பகுதிகளில் மீலாத்தினத்தை வரவேற்கும் பதாதைகள் காணப்பட்டதுடன், நகரம் முழுவதும் பச்சைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுமிருந்தன.
குறிப்பாக முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய பள்ளிவாசல்களை மையமாக வைத்து கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் இம்முறை மீலாத் ஊர் வலங்கள், ஆடம்பர நிகழ்வுகளின்றி அமைதியான முறையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பள்ளிவாசல்கள் மின் விளக்குகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், மரம் நடுகை, சன்மார்க்க சொற்பொழிவு, பாலர் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஏ.எல்.எம்.சலீம்