
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அம்பாறை, அலிகம்பே கிராம மக்களுக்கான சுகாதார சேவையை மேம்படுத்த நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் அலிகம்பே பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவொன்றினை ஏற்படுத்தி அதனூடாக அப்பகுதி மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னாள் பிராந்திய பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மெலிண்டன் கொஸ்தா ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் தற்போதைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனினாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அலிகம்பே பிரதேச மக்களின் சுகாதார நலன்கருதி அங்குள்ள கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை எஸ். ஜெகநாதன் மற்றும் அப்பகுதி பொது நிறுவனங்களின் முயற்சியின் பலனாக சுமார் 25 மில்லியன் ரூபா நிதியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அது அண்மையில் சுகாதார திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டது.
இந்தக் கட்டடப்பணிகளை முன்னெடுத்த தொண்டு நிறுவனத்தினர் அதற்கு நிதியுதவிகளை வழங்கிய ஜப்பான் நாட்டு பிரதிநிதிகள் அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து அலிகம்பே மக்களின் சுகாதார மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது சுகாதார தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கான தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிரும் கலந்துகொண்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)