
posted 16th January 2023
வட மாகாண அமல மரி தியாகிகளின் சபை முதல்வராக அருட்பணி எஸ். ஜெயந்தன் பச்சேக் அடிகளார் (அ.ம.தி) நியமனம் பெற்றுள்ளார். இவர் இம் மாகாணத்தின் ஒன்பதாவது முதல்வராவார்.
இவர் மன்னார் மாவட்டத்தில் பேசாலையைச் சேர்ந்தவரும், ஓய்வுநிலை அதிபர் திரு. செபஸ்தியாம்பிள்ளை பச்சேக், திருமதி மேரி யுஸ்ரினா பெர்னாண்டோ ஆகியோரின் இரண்டாவது புதல்வருமாவார்.
அருட்பணி எஸ். ஜெயந்தன் பச்சேக் அடிகளார் (அ.ம.தி) தனது ஆரம்பக் கல்வியை பேசாலை புனித மேரிஸ் பாடசாலையில் இரண்டாம் வகுப்பு வரை கற்றபின் உயர்தர வகுப்பு வரை பேசாலை சென் பற்றிமா மகா வித்தியாலயத்தில் கற்றவராவார்.
1989 ஆம் ஆண்டு யாழ் கொழும்புத்துறை அமல மரி தியாகி சபையின் சிறிய குருமடத்தில் இணைந்து கொண்ட இவர் பின் தனது மெய்யியல் கல்வியை கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் கற்றபின் பண்டாரவைளயில் தனது நவசந்தியாச வாழ்வில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்கள் உரோமாபுரியிலுள்ள கிறகோரியன் பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்றபின் 1999 ஆம் ஆண்டு உரோமாபுரியில் தியாக்கோனாக அபிஷேகம் பண்ணப்பட்டார்.
பின் 12.01.2000 ஆம் ஆண்டு அமரர் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால் அருட்பணியாளராக அபிஷேகம் செய்யப்பட்டார்.

அருட்பணி செ.ஜெயந்தன் பச்சேக் அடிகளார்
இதன் பின்னர் கொழும்புத்துறையில் அமல மரி தியாகி இல்லத்தில் மாணவர்களின் உருவாக்கத்தில் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
பின் 2002 லிருந்து 2004 வரைக்கும் உரோமாபுரி கிறகோரியன் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பில் ஈடுபட்டார். 2004 லிருந்து 2009 வரை வவுனியா தேசிய கல்வியல் கல்லூhயில் விரிவுரையாளராக செயல்பட்டுக் கொண்டு இருந்த காலத்தில் வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒரு ஆன்மீகக் குருவாக தனது நேரங்களை செலவழித்து வந்தார்.
2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அத்துடன் கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்பித்தவராகவும் திகழ்ந்து வந்தார்.
இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை நோர்வே நாட்டில் தமிழ் மக்களுக்கு அங்கு ஒரு ஆன்மீக குருவாக தனது அருட்பணி வாழ்வை மேற்கொண்டு வந்ததுடன்,
பின் நாடு திரும்பியதும் சொற்ப மாதங்களாக மன்னார் அமல மரி தியாகிகளின் ஞானோதயத்தின் இயக்குனராக இருந்து வந்த இந்த வேளையிலேயே இவர் வட மாகாண அமல மரி தியாகிகளின் சபையின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
அடிகளார் எல்லா மக்களுடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகி வருபவர் மாத்திரமல்ல எப்பொழுதும் இன்முகத்துடனே காணப்படும் ஒரு சுபாவம் கொண்டவராக திகழ்பவர் எனப் போற்றப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)