
posted 21st September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மீளக் கையளிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
உயிரத்த ஞாயிறு தாக்குதலையடுத்து அரசினால் பொறுப்பேற்கப்பட்டு முழுமையாக இராணுவத்தினரின் பொறுப்பில் விடப்பட்ட மட்டக்களப்பு கெம்பஸ் (Batticaloa Campus) கட்டிடங்கள் மீளவும் சட்டப்படி அதன் நிருவாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் உத்தரவுக்கமைய மேற்படி தனியார் கெம்பஸ் கட்டிடங்களை விட்டும் இராணுவம் முற்றாக அகன்றுள்ளதுடன், அதன் ஸ்தாபகரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாவிடம் இராணுவத்தினர் கடந்த புதன் கிழமை (20.09.2023) சட்டப்படி மீளவும் ஒப்படைத்தனர்.
சரிஆ பல்கலைக்கழகமாக இதனை உருவாக்குவதாக அப்போது (உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து) பொய்யான, உண்மைக்கும் புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அரசு கையகப்படுத்தி, இராணுவத்திடம் வழங்கிய கசப்பான சம்பவம் நாட்டில் பரவலாக, பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும்.
முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாவின் அரும்பெரும் முயற்சியால் குறிப்பாக சவூதியிலுள்ள தனவந்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மீளவும் ஒப்படைக்கப்பட்டமையை நாட்டின் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளதுடன் ஜனாதிபதியின் நீதியான இந்த நடவடிக்கைக்கு நன்றியைத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக ஸ்தாபகரும், முன்னாள் ஆளுநருமான கலாநிதி ஹிஸ்புல்லா கருத்து வெளியிடுகையில்,
“இந்த பல்கலைக்கழகத்தை மீளவும் சட்டப்படி ஒப்படைப்பதில் ஜனாதிபதி காட்டிய அக்கறைக்கும் பெரும் பங்கிற்கும் நாம் என்றும் நன்றிபகரக்கடமைப்பட்டுள்ளோம்.
அதே போல் இதற்கு முழு ஆதரவு வழங்கிய ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்னாயக்க மற்றும் இராணுவத்தினருட்பட சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்றி பகர்கின்றோம்.
நாட்டின் சகல இனமக்களுக்கும் நன்மை பயக்கவும், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகாத அடுத்த கட்டத்திலுள்ள மாணவர்களை நெறிப்படுத்திகை தூக்கி விடவும் இந்த பல்கலைகழகத்தின் சேவைகள் அமையும்.
பயிற்சிகளோடு இணைந்த எமது இந்த பல்கலைக்கழகம், ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட பாதுக்கை எஸ்.எல்.ரி. பல்கலைக்கழகத்துடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படும்” என்றார்.
மட்டக்களப்பு – பொலனறுவை வீதியில் ரிதிதென்ன எனுமிடத்தில் இந்த மட்டக்களப்பு கெம்பஸ் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன் கிழமை சட்டப்படி மீளவும் இராணுவத்திடமிருந்து பல்கலைக்கழகத்தைப் பொறுப்பேற்றுக்கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லா, பல்கலைக்கழகவளாக வெளியில் தொழுகையிலீடுபட்டு சுஜுதில் இறைவனுக்கு நன்றி பகர்ந்தமையும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)