
posted 19th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மிகப்பெரிய சூழ்ச்சிதான் ஈஸ்டர் தாக்குதல்
“அண்மையில் வெளியான சனல் - 04 காணொளி விடயம் பொய்யாக புனையப்பட்ட விடயமல்ல. அதில் அவிழ்க்கப்படாத இன்னும் பல மர்மங்கள் உள்ளன போன்றே தெரிகிறது. சக்திவாய்ந்த அந்நிய நாடுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இப்படியான சம்பவங்கள் இலங்கையில் அரங்கேறுகின்றன. இலங்கை முஸ்லிங்களை குறி வைத்து அதிகாரக் கதிரையை நோக்கியதாக முன்னெடுக்கப்பட்ட பெரிய சக்திகளின் பந்தாடலுக்குள் இலங்கை முஸ்லிம் சமூகம் சிக்கிக் கொண்டுள்ளது.”
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
மருதமுனை மருதூர் கொத்தன் கலையரங்கில் நடைபெற்ற மருதமுனை பைத்துல் ஹெல்ப் போ ரிலீப் அமைப்பின் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தெற்காசியாவின் பூகோள அரசியல் போட்டிக்காக இலங்கையின் நிலையை மோசமான சூழ்நிலைக்கு சில சக்திகள் கொண்டு செல்கின்றன. அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் சில நாடுகள் சிக்கிக்கொண்டது போல சீன - அமெரிக்க பூகோள அரசியல் போட்டியில் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கேந்திர நிலையமான இலங்கை மாட்டிக்கொண்டுள்ளது.
இலங்கையில் யார் ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் அமைக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது மேற்கத்தேய சக்திகளாகவே இருக்கிறன. அவர்கள் தமது சுயநலனுக்காக சுயாதீனமாக எமது நாட்டை கொண்டுசெல்ல விடமாட்டார்கள். அவர்கள் சரியாக திட்டமிட்டு நாட்டை சீரழிக்க காய் நகர்த்துவார்கள்.
குறிப்பாக சணல் 4 இல் வெளியான காணொளியில் ஆசாத் மௌலானா கூறிய விடயங்களை இலேசில் தட்டிக்கழிக்க முடியாது. அதில் பல உண்மைகள் இருக்கிறன. முஸ்லிம்களை பலிக்கடாவாக்கி முஸ்லிம்கள் மீது பாலி சுமத்தி தங்களுடைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டு சக்திகளும், உள்ளூர் சக்திகளும் சேர்ந்து செய்த மிகப்பெரிய சூழ்ச்சிதான் ஈஸ்டர் தாக்குதல். இதில் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்பட்டு கிறிஸ்தவ சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டது.
அது போன்றே தலைவர் அஷ்ரப்பின் மரணமும் பல மர்மங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதனால் பல்வேறு காய்கள் நகர்த்தப்படும். இலங்கையர்களான நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும்.
அந்நிய சக்திகளின் பொறியில் மாட்டிக்கொண்ட இலங்கை போலவே வடக்கு கிழக்கில் அதிக முஸ்லிங்களை கொண்ட கேந்திர நிலையமான கல்முனையும் மாட்டிக்கொண்டுள்ளது. இவைகளையெல்லாம் பற்றி சிந்திக்காது கல்முனை நகரில் உள்ள சில மனநோயாளிகள் சம்பந்தமே இல்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
கல்முனை மாநகரின் மகிமையை பாதுகாக்க மருதமுனையின் பங்களிப்பு அளப்பரியது. இந்த மனநோயாளிகளை பற்றி பேச இந்த இடம் போதாது. இவர்களை பற்றி நிறைய பேசவேண்டியுள்ளது. எதிர்காலத்தில் அவர்களை பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)