
posted 7th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
செல்வம் எம். பிக்கு நீதிமன்றம் பிணை
சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றில் முற்படாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம். பி. புதன்கிழமை (06) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நாட்டின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான பேரணியில் பங்களித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது. நீதிமன்றில் முற்படாதமைக்காக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிரேஷ்ட சட்டத்தரணி என். சிறிகாந்தா ஊடாக மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மன்று ஆட்பிணையில் செல்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் எம். பிக்கு அனுமதியளித்திருந்தது.
இந்த வழக்கில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் பிணை ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)