
posted 21st September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறுமியின் உடலத்தை தந்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம்!
மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உயிரிழந்த சிறுமியின் அம்மம்மாவான குணரட்ணம் ரோகிணி தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்றைய முன்தினம் (19) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டது.
மேலும், கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதியன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். இறந்த சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த 5ஆம் திகதி சிறுமியின் உடல் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்டபான உண்மையான தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும். சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். இதனை தாழ்மையாக கேட்கின்றேன். எங்களுக்கு எங்கள் பிள்ளையின் உடலம் தேவை என்றார்.
இதேவேளை, குறித்த சிறுமின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)