
posted 13th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கொக்குத்தொடுவாய் புதைகுழி இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் தொடரும் அகழ்வாய்வில் நேற்று (12) செவ்வாய் ஒரு எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டது. அத்துடன், கழிவுநீரை சுத்திகரித்து அருந்த பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு நீர் சுத்திகரிப்பு கருவி, துப்பாக்கி தோட்டா என்பவையும் மீட்கப்பட்டன.
கொக்குத்தோடுவாய் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கடந்த ஆறாம் திகதி தொடங்கிய இரண்டாம் கட்ட அகழ்வில் இதுவரை 6 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முன்னதாக 13 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற இந்த அகழ்வு குறித்து முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்து வெளியிடுகையில்;
கொக்குத்தொடுவாய் ஆறாவதுநாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி முழுமையாக அகழப்பட்டது. பகுதியளவில் அகழந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதி பாகங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அத்துடன், குறித்த ஆறாம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும் கழிவு நீரைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்ய தயாரிப்பு நீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றும் தடயப் பொருட்களாக பெறப்பட்டுள்ளன.
இதேவேளை, இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக் கூடுகள் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை.
இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)