
posted 14th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
குடும்பஸ்தர் கொலை - சந்தேக நபர்கள் கைது
முல்லைத்தீவு - சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்று முன்தினம் (12) செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுண் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்லும்போது கொள்ளையர்களால் வீட்டின் உரிமையாளர் தாக்கப்பட்ட நிலைமையில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், இந்த கொள்ளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று முன் தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதிகளைச் சேர்ந்த 27, 26 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நேற்று முன் தினம் முல்லைத்தீவு நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 21 ஆம் திகதிவரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மற்றைய நபர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)