
posted 25th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
3 இலங்கை இளைஞர்கள் மலேசியாவில் படுகொலை!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செந்தூல், ஜாலான், பெர்ஹெண்டியன் கம்பங் கோவில் ஹிலிரில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளி (23) இரவு மூன்று இலங்கை ஆண்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலையை பிளாஸ்ரிக்கால் மூடிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த கொலைகளுடன் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பொலிஸார் சென்றடைவதற்கு முன்னதாகவே இலங்கையைச் சேர்ந்த அவர்கள் தப்பியோடிவிட்டதாக கோலாலம்பூர் பொலிஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வெள்ளி (23) இரவு 11 மணியளவில் நான்கு மாடிக் கடை வீதியில் உள்ள ஒரு வீட்டில் சண்டை நடந்ததாக பொதுமக்களிடமிருந்து பொலிஸாக்கு அழைப்பு வந்தது.
அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் மூன்று ஆண்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் அவ்வீட்டின் களஞ்சிய அறையில், அவர்களின் வலது கைகள் மற்றும் கால்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தலைகள் பிளாஸ்ரிக்கால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன.
அவர்களில் ஒருவரின் சடலம் நிர்வாணமாக காணப்பட்டது.
வீட்டைச் சோதனை செய்ததில், 40 வயதுடைய இலங்கைத் தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தமை தெரிய வந்தது. பலியான மூன்று பேரில், அந்த தம்பதியின் 20 வயது மகனும் உள்ளடங்குகிறார்.
இலங்கை தம்பதியர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்.
கொல்லப்பட்ட ஏனைய 2 இலங்கை இளைஞர்களும் அந்த வளாகத்தில் அறையொன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்தவர்கள்.
கொல்லப்பட்ட மூவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்கள் . இந்த படுகொலையில் முக்கிய சந்தேகநபர்கள் இருவர் தப்பியோடியவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கத்தி ஒற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்கள் இருவரும், கொலையுண்ட ஒரு இளைஞனின் பெற்றோருடன் பழகியவர்கள். ஆறு மாதங்களாக அவர்கள் அறிமுகமான நண்பர்களாக இருந்தவர்கள். 2 நாட்களாக அந்த வீட்டில் தங்கிருந்துள்ளனர் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)