
posted 28th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத் தொடர்ந்து வல்லிபுர பெருமான் பரிவார மூர்த்திகளுடன் காலை 9 மணிக்கு தேரில் ஆரோகணித்து வலம் வந்தார். தேருக்கு பின்புறமாக அங்க பிரதட்சை செய்தவர்கள், அடி அழித்தவர்கள், பஜனைக் குழுவினர், கற்பூரச்சட்டி, காவடிகள் என அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
ஆஞ்சநேயர் முன்னேவர பரிவார, மூர்த்திகளும் தேரில் வர, மூன்றாவது வல்லிபுரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம் வந்தார்.
இதில் வடமராட்சி உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் வருகைதந்து வல்லிபரத்தாழ்வார் தேர் உற்சவத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த 14/09/2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் 15ஆவது நாளான இன்று தேர் உற்சவம் இடம் பெற்றது. அதேவேளை நாளை பிற்பகல் வல்லிபுரத்து ஆழதவாரின் சமுத்திர தீர்த்தமும், நாளை மறுதினம் கேணித் தீர்த்தமும் இடம் பெற்று திருவிழா நிறைவு பெறவுள்ளது.
போக்குவரத்து சேவைகள் வழமையான முறையில் இடம்பெற்றன. மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், வீதிகள் தோறும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு நீராகாரமும் வழங்கப்பட்டது. பொலீசார், சாரணர், இலங்கை முதலுதவி சங்க தொண்டர்களும் பக்தர்களுக்கான ஒழுங்கமைப்பு, பாதுகாப்புக் கடமைகளை மேற்கொண்டனர்.
கிரிகைகள் யாவும் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)