
posted 12th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சரத் பொன்சேகா மீதும் சர்வதேச விசாரணை தேவை
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கும் சரத் பொன்சேகா 2009இல் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இறக்கும்போது அவர் இராணுவத் தளபதியாக இருந்தவர். எனவே, அவர் அவர்களுக்கு என்ன நடந்தது என பதில் கூறவேண்டும் அல்லது அவர் மீதும் 2009 வரை வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற தமிழர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காகளிக் கட்சியான ரெலோவின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தனது பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது பேசு பொருளாக இருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து சனல் 4 ஊடகம் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இந்த சம்பவம் பலரின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியபடுத்தியுள்ளது.
அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கான சூத்திரதாரிகள் யார் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த குண்டு வெடிப்பில் மட்டக்களப்பில் 31 பேரும் 40 வெளிநாட்டவர்கள் உட்பட 250 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த உண்மைகளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளராக கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த ஆசாத் மௌலானா வெளிநாட்டில் தஞ்சமடைந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்த குண்டு வெடிப்பில் நியாயம் கோரி இன்று சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நாட்டிலே உள்நாட்டு விசாரணைக்கு எந்த விதமான நம்பிக்கையும் இல்லை என்பது இவர்களுக்கு தெரியும். ஏனென்றால், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு பொறுப்பாக இருந்து விசாரணை செய்து கொண்டிருந்தவர் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாக வந்ததும் அவர் இந்த நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரையும் விசாரணைக்கு அழைத்து அவர் தனது உயிருக்கு உத்தரவாதம் இருக்காது என்ற காரணத்தால் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ள நிலையில் அவரும் பல உண்மைகளை கூறிவருகின்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். எனவே, இந்த சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை கொடுக்க வேண்டும்.
ஆசாத் மௌலானா கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் அதன் உறுப்பினர்களையும் பாவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே அவர்களுடன் இருந்து செயல்பட்ட மௌலானா கூட ஒரு குற்றவாளியாக கருதப்படுவார்.
சர்வதேச விசாரணை என்று கேட்பவர்கள் அரசியல் ரீதியாக தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக இந்த குண்டு வெடிப்பையும் மக்களது உயிர்களை வைத்து அரசியல் சித்து விளையாட்டு காட்டாமல் இந்த நாட்டிலே 2009 வரை கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட அத்தனை உயிர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)