மின்சார மோசடியில், அதிரடி நடவடிக்கையில் புலனாய்வுக் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனைப் பிராந்தியத்தில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள மின்மானிகளில் மாற்றம் செய்து மின்சார மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்காக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட இம்மூவரும் தமது வீடுகளிலுள்ள மின்சார இணைப்புக்கான மின்மானியில் நுட்பமாக மாற்றம் செய்து, நீண்ட காலமாக சட்டவிரோத மின்சாரத்தை பெற்று வந்தமை தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து வந்த மின்சார சபை விசேட புலனாய்வு உத்தியோகத்தர்களின் திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்போதே இவர்களது சட்டவிரோத செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தின் அனுசரணையுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத செயலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கல்முனைப் பகுதியை சேர்ந்த முக்கிய சமூக செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்கதக்கது.

மின்சார மோசடியில், அதிரடி நடவடிக்கையில் புலனாய்வுக் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)