
posted 25th September 2022
வீட்டின் தேவைகளுக்காக விறகு சேகரிப்பதற்காக வீட்டிலிருந்து சிறிது தூரம் காட்டுக்குள் சென்றவர் யானை தாக்கி ஸ்தலத்திலேயே மரணமானார்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (23.09.2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மன்னார் முசலி மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர். நஸீர் இறந்தவரின் மனைவி ஸ்ரான்லி சகாய மேரியை (வயது 54) விசாரணை மேற்கொண்ட மரண விசாரணையிலிருந்து தெரிய வருவதாவது;
மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான பபா என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் ஸ்ரான்லி (வயது 54) சம்பவம் அன்று பிற்பகல் ஐந்து மணியளவில் தனது வீட்டுக்குத் தேவையான விறகுகளை சேகரிப்பதற்காக வீட்டின் அருகாமையிலுள்ள அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளார்.
பொழுது சாய்ந்தும் இவரை காணாத மனைவி தேடிச் சென்றதாகவும், பின் அயலவர்களின் உதவியை நாடி காட்டுக்குள் சென்று தேடியபோது வீட்டிலிருந்து சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்திலுள்ள காட்டுக்குள் இவர் யானையினால் தாக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாகவும், அந்நேரத்தில் அப்பகுதியில் யானை கூட்டம் ஒன்று நிற்பதை சென்றவர்கள் கண்டுணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்திசாலைக்கு எடுத்துவரப்பட்டு மரண விசாரணைக்கும் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு பின் உறவினர்களிடம் கையளிக்க மரண விசாரனை அதிகாரியால் பொலிசாருக்கு கட்டளை வழங்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)