போதைப் பொருளுக்கு ளால் பாதிப்பானவர்க்கு விடுதி வசதிகள் யாழ்ப்பாணத்தில் தேவை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சைக்கு முன்வருவது கடந்த அண்மைய நாள்களாக அதிகரித்துள்ளது.

அவர்களுக்கான புனர்வாழ்வு விடுதி வசதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், அவர்களுக்கு உளவள ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பாவனையும், ஏனைய போதைப் பொருள்களின் பாவனையும் வெகுவாக அதிகரித்துள்ளன.

ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சமூகப் பிறழ்வான சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இந்தநிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வருவது அண்மைய நாள்களாக அதிகரித்துள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானவர்களைத் தங்க வைத்து சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை. சாவகச்சேரி மருத்துவமனையில் மதுப் பாவனைக்கு அடிமையானவர்களைத் தங்க வைத்துச் சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகள் உள்ளபோதும், ஹெரோய்ன் போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைத் தங்க வைத்துச் சிகிச்சையளிக்கக் கூடிய விடுதி வசதிகள் இல்லை.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் கந்தகாடு, வெலிகந்தை புனர்வாழ்வு முகாம்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படுகின்றன. அவ்வாறான புனர்வாழ்வு முகாம்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இல்லை.

இதனால்,தற்போது சிகிச்சைக்கு வரும் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு உளநல ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு , வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

உளநல ஆலோசனைகள் தனியாக, குழுவாக, குடும்ப உறுப்பினர்கள் எனப் பல்வேறு வழிமுறைகளில் பல்வேறு கட்டங்களாக வழங்கப்படுகின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சை பெற முன்வரும் நிலையில், அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கக்கூடிய நிலையம் ஒன்றை உருவாக்குவது கூடிய பயனைத் தரும் என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

போதைப் பொருளுக்கு ளால் பாதிப்பானவர்க்கு விடுதி வசதிகள் யாழ்ப்பாணத்தில் தேவை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)