தொடரும் நிந்தவூர் கடலரிப்பும் - எடுக்கப்பட்ட முடிவுகளும்

நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல் சுலைமா லெவ்வையின் அழைப்பினையேற்று, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆர்.ஏ.எஸ். ரணவக்க நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக் காலமாக நிலவிவரும் தொடர் கடலரிப்பின் மூலமாக ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காகவும், எதிர்காலத்தில் கடலரிப்பினைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவரினை அமைக்கும் நிரந்தர நடவடிக்கைளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காகவும் பணிப்பாளர் நாயகத்தின் இந்த விஜயம் அமைந்தது.

நிந்தவூர் பிரதேச கடற்கரைப் பகுதியானது, கடந்த பல வருடங்களாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த மாதம் இது உக்கிரமடைந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த கடல் அரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்காக, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களமானது, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், கடலரிப்பிற்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவுமே பணிப்பாளர் நாயகத்தின் இந்த விஜயம் அமைந்திருந்தது.

இங்கு கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.எஸ். ரணவக்க ;

இலங்கையில் எந்த ஊரிலும் ஏற்படாத கடலரிப்பினை, நிந்தவூரில் தான் கண்டு கொண்டுள்ளதாகவும், குறிப்பாக கடந்த காலங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பு மூலம் பிரதேச மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையினை கட்டாயம் தீர்த்து வைத்து, நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் என்னால் மேற்கொள்ளப்படும்.

மேலும், தமது திணைக்களமானது கடல் அரிப்பினைத் தடுப்பதற்குரிய சாத்திய வள அறிக்கையினை பெற்றுள்ளதுடன், அவைகளை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்புக்களையும் செய்து வருகின்றது.

எனவே, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினைத் தடுப்பதுடன், இதற்கான நிரந்தர நடவடிக்கைகளைப் பெற்றுக் கொடுப்பது தன்னுடைய தார்மீகக் கடமையாகும் எனவும், இதில் நிந்தவூர் பிரதேச மக்கள் சிறிதளவேனும் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், உப தவிசாளர் வை.எல் சுலைமாலெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.எம். அன்சார், சட்டத்தரணி ரியாஸ் ஆதம், ஏ. அஸ்வர், கே.எம். ஜாரிஸ், ஏ.எம். ரபீக், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எம். மஜீத், எம். வாஹிட் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான கலையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதாசன், நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டு கழகத்தின் தலைவரும், சமூகவியலாளருமான எம்.சி.எம். றிபாய் மற்றும் மீனவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை கருத்து தெரிவிக்கையில் ;

நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினைத் தடுப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் யாவும் வெற்றி அடைந்துள்ளது. நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் நிந்தவூர் கடலரிப்பும் - எடுக்கப்பட்ட முடிவுகளும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)