
posted 21st September 2022
மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஒரு பகுதியை பகுப்பாய்வுக்கு எடுத்துச் செல்வதற்காக இம் மனித எச்சங்களை பிரித்தெடுப்பது மன்னாரிலா அல்லது அனுராதபுரத்திலா என்ற வாதங்கள் பிரதிவாதங்களுக்கு மத்தியில் அனுராதபுர நீதவான் முன்னிலையில் மனித எச்சங்களை பகுப்பாய்வுக்காக பிரித்தெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது என இவ் வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸவரம் மனித புதைகுழி வழக்கு புதன்கிழமை (21.09.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இவ் வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரனி; வீ.எஸ். நிரஞ்சனும் மற்றும் திருமதி றனித்தா ஞானராஜ் ஆகியோரும் மற்றும் வழக்கு தொடுனர் சார்பில் அரச சட்டத்தரனி மற்றும் பொலிசாரும் அகழ்வு பணியில் தலைமை தாங்கி ஈடுபட்டவர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் இவ் வழக்கு தொடர்பாக தெரிவிக்கையில்;
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் சமட் கிப்துல்லா முன்னிலையில் புதன்கிழமை (21.09.2022) விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இவ் வழக்கில் ஏற்கனவே கடந்த தவணையில் மன்னார் நீதிமன்றத்தால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த புதைகுழியிலிருந்து ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்டிருந்த மனித எச்சங்கள் அனுராதபுர வைத்திசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை மன்னாருக்க மீண்டும் கொண்டு வந்து இதிலிருந்து தெரிவு செய்யப்படும் மனித எச்சங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரி தெரிவு செய்வதற்கான கட்டளை ஆக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வழக்கு தொடரான அரசு தரப்பினர் இன்று புதன்கிழமை (21.09.2022) நீதிமன்றுக்கு முன்னிலையாகி இம் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட வைத்திய கலாநிதி வைத்தியரத்தின மற்றும் ஹேவகே ஆகியோர் மன்னார் நீதிமன்றுக்கு இம் மனித எச்சங்களை கொண்டு வந்து பரிசோதனைக்காக பிரித்தெடுப்பதாக இருந்தால் பல சிரமங்கள் இருப்தாக தெரிவித்தனர்.
அதாவது பல வருடங்களாக கொண்ட இந்த மனித எச்சங்களை இங்கு கொண்டு வந்து பின் கொழும்புக்கு கொண்டு செல்லப்படும் போது இவைகள் பாதிப்படையும் என்ற அடிப்படையிலும், பல சிரமங்கள் இருப்தாகவும் தெரிவித்து இவற்றை தாங்கள் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் பகுப்பாய்வு செய்ய கட்டளையிடுமாறு கேட்டிருந்தார்கள் என்றும், இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் இவ் வழக்கில் ஆரம்பம் தொட்டு முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகள் நாங்கள் கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தோம்.
இரு பக்கங்களிலிருந்தும் வந்த வாதம், பிரதிவாதங்களையும் நோக்கிய நீதவான் அனுராதபுரத்துக்குச் சென்று இம் மனித எச்சங்களை பகுப்பாய்வுக்கு பிரித்து எடுப்பதற்கு தனக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும், இது மன்னார் நீதிமன்ற எல்லைக்குள்ளேயே இடம்பெற வேண்டும் என்றும், இதற்கு வழக்கு தொடுனராகிய வைத்திய கலாநிதிகளுக்கு அசௌரியங்களாக இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுத்து அனுராதபுர நீதவான் முன்னிலையில் இவ் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்வுக்காக பிரித்தெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
இவ் வழக்கு நவம்பர் மாதம் 24 ந் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு நிலத்தடியின் ஊடாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் ஆலய வீதிக்கு அருகாமையில் 2013 ஆம் ஆண்டு நீர் வழங்கல் சபையினால் குழாய்கள் பதித்துச் சென்றபோதே இம் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)