இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புதிய நிர்வாக தெரிவில் இழுபறி நிலையிலிருந்து வந்த வேலணை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க புதிய நிர்வாக தெரிவு இன்றையதினம் நடைபெற்றது.

இதனடிப்படையில் 4 வருடங்களாக நிலவி வந்த புதிய நிர்வாக தெரிவு இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்களுக்கும், வைத்தியசாலைக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை விரிவாக்கம் செய்யும் வகையிலும் 15 உறுப்பினர்களை கொண்டதாக தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தின் தலைவராக சட்ட யாப்புகளுக்கு அமைவாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சத்தியறூபன் நியமிக்கப்பட்டார்.

நலன்புரிச் சங்கத்தின் ஏனைய பொறுப்புக்காளான செயலாளர் பதவிக்கு திரு. ஜெகனாதனும், உப செயலாளராக அன்ரன் ஜேசுதாசனும் பொருளாளராக கஜீபனும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகத்தின் போசகர்களாக சின்னையா சிவராசாவும், கந்தசாமி ஜெயச்சந்திரமூர்த்தியும், கணக்காய்வாளராக கோமதாசும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய நிர்வாகத்தின் தலைவரான வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சத்தியறூபன் கருத்துரைக்கையில்;
இலங்கை வைத்தியசாலைகளின் தர வரிசையில் "பி" தரத்தில் இருக்கும் வேலணை வைத்தியசாலையின் வளர்ச்சிப் போக்கு பிரதேசத்தின் சுகாதாரம் மற்றும் மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதே முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறிய அவர் தொடர்ந்தும் முரண்பாடுகளை வளர்க்காமல் எதிர்வரும் காலத்தை மக்களின் நலன்கருதியதாக்க முன்னின்று உழைப்போம் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும் முடியுமானவரை முழு அர்ப்பணிப்புடன் இந்த நிர்வாகம் செயற்படுவதுடன் எதிர்கொள்ளப்படும் சவால்களை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நீண்ட வருடங்களாக வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் செயற்படாதிருந்தமைக்கு நாட்டை முடக்கிய கொரோனா அச்சுறுத்தல் ஒரு காரணமாக இருந்தாலும், நிர்வாகத்தின் ஒத்துழைப்பின்மை சிலரது தன்னிச்சையான போக்கு ஆகியவையே காரணம் என சுட்டிக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)