இருந்தும் இல்லாத பஸ்களால் கஷ்டப்படும் மாணவர்கள்

பஸ்கள் நிறுத்தாமல் செல்வதால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்து வவுனியா கொல்லர் புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7 மணியளவில் ஏ- 9 பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்;

பாடசாலைக்குச் செல்வதற்காக காலை 6 மணிக்கே எமது பிள்ளைகள் வீட்டிலிருந்து சென்று பல மணி நேரம் காத்திருந்தும் பஸ்கள் நிறுத்தப்படாமையினால் வீட்டுக்கே திரும்பி வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இதேவேளை, பாடசாலை முடிவடைந்த பின்னரும் மாலை 4 மணிளவிலேயே பிள்ளைகள் வீட்டுக்கு வருகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்படுவதுடன், பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்கின்றனர்.

எனவே, எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பஸ்களை நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொல்லர் புளியங்குளம், மன்னகுளம், குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களை வீதியில் காத்திருக்க விடாதீர்கள்

மாணவர்களின் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

எமது உரிமையை காப்பாற்றுங்கள்

போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஆர்பாட்டகார்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்த கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு பொலிஸார் ஒத்துழைப்புகளை வழங்குவதோடு, பஸ் சாரதி, நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இருந்தும் இல்லாத பஸ்களால் கஷ்டப்படும் மாணவர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)