அரசின் பொறுப்பு அதிகாரத்தைச் சரிவரக் கொடுப்பது

கல்முனை பிரதேச செயலகத்தை அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக மாற்றுவதற்குரிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இதிலிருந்து அரசு நழுவக் கூடாது. இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஈபிஆர்.எல்.எப் - ப.ம,இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அதிகாரங்களை உடையதாக வருவதை தடுப்பதற்கு முயற்சிக்கும் தமிழின விரோதிகளின் கருத்துக்களை நல்லாட்சி நிருவாகம் ஏன் செவிமடுக்க வேண்டும்? அரசு இனங்களை பிரித்தாளும் தந்திரமா?

1989ம் ஆண்டு பிரதேச செயலக முறை அமுலாக்கப்பட்ட நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மட்டும் ஏன் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. முஸ்லிம் அமைச்சர்களின் அரசு மீதான அழுத்தங்களா? தமிழர்கள் தரப்பில் ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி அதை அமுல்படுத்துவதற்குக் கூட இந்த அரசை நிற்பந்திக்குமளவிற்கு ஒரு முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வழி வகுக்குமளவிற்கு கடந்த காலத்தில் அரசிடம் நல்லாட்சி இல்லையா?

இனி வரும் காலங்களிலாவது அரசு நல்லாட்சிமுறை கொள்கையை கடைப் பிடிப்பதற்கு ஒரு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது அரசின் பொறுப்பாகும். இந்த வகையில் கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் நல்லாட்சி, காணி, நிதி தொடர்பான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் உள்ள பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

இந்த வகையில் இது நல்லாட்சி அரசாக இருந்தால் சுயமாகவே அதிகாரம் உள்ள பிரதேச செயலகமாக மாற்ற வேண்டும். இதைவிடுத்து இரண்டு இனங்களுக்குரிய செல்வாக்குகளும் அரசுக்கு சார்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்முனை தமிழ் சமூகத்தை பழிக்கிடாவாக மாற்றுவதற்கு முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

அரசின் பொறுப்பு அதிகாரத்தைச் சரிவரக் கொடுப்பது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)