பலவகைச் செய்தித் துணுக்குகள்

மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவம்

இலங்கை பொலிஸாரின் 156 வது ஆண்டை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி கிளையுடன் இணைந்து மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (10) 10:00 மணியளவில் இடம் பெற்றது.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி காஞ்சனா விமலவீர தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மக்களுக்கான மூக்கு கண்ணாடிகள் பயன்தரும் மரங்கள் என்பன வழங்கப்பட்டுளளன.

இந்நிகழ்வில் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டாச்சியும், உதவி பொலிஸ் அத்தியட்சர் K.K.S. சுஜீவ இத்துமால் கொட மற்றும் நெல்லியடி பொலீசார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயங்கச் செய்ய வேண்டுகோள்

காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை இடம்பெறாமையால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

காரைநகர் மற்றும் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஊர்காவற்றுறை, வேலணை மற்றும் தீவுப் பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும், இதேபோன்று, மேற்படி தீவகத்தில் இருந்து காரைநகர் மற்றும் இதர பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களும், மற்றும் பொதுமக்களும் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இப்பாதை ஊடாகவே பயணத்தை மேற்கொள்கின்றோம்.

எரிபொருள் இன்மையைக் காரணம் காட்டி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாதைச் சேவை இடம்பெறவில்லை. ஆனால், இக்காலத்தில் தனியார் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. இத் தனியார் படகுச் சேவை மூலமான பயணம் ஆபத்துக்கள் நிறைந்ததுமல்லாமல், எமது மோட்டார் சைக்கிள்களின் பகுதிகள் அடிக்கடி உடைந்து சேதமடைகின்றன. மேலும் வாகன அடிச்சட்டமும் பாதிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றி, இறக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தினால் அவை கீழே வீழ்ந்து உதிரிப்பாகங்கள் சேதமடைகின்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இருவழிப் பயணத்திற்கும் தினமும் ரூபா 200ம் கட்டவேண்டியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் எமது வாகனங்களின் உதிரிப்பாகங்களை அடிக்கடி மாற்றுவது என்பதும், தினமும் 200 ரூபா பணம் செலுத்துவது என்பதும் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. இச்சுமையை எங்களால் சுமக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பாதை விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என நாம் உணர்கின்றோம். பயணிகள் சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு விசேட அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவது போன்று, பாதைக்கும் எரிபொருள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய சேவையான பாதை ஒன்று இருக்கின்ற நிலையில் நாம் இவ்வாறு வீணான சிரமங்களை எதிர்நோக்குவது வேதனையானது.

மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய இயந்திரமே தங்களிடம் இருப்பதால் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத காலங்களில் சேவையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பெற்றோலில் இயங்கக்கூடிய இயந்திரம் ஒன்றையும் வைத்திருப்பதன் மூலம் மண்ணெண்ணெய் இல்லாத நேரங்களில் பெற்றோலில் இயக்கி சேவையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.

எனவே, இவ்விடயத்தில் தாங்கள் அதிகூடிய கரிசனை எடுத்து பாதைச் சேவை தடையின்றி சீராக நடைபெற ஏற்பாடு செய்வதன் மூலம் அரச உத்தியோகத்தர்களினதும், பொதுமக்களினதும் வீண் சிரமங்களுக்கும் பொருளாதார இழப்புக்களுக்கும் தீர்வு பெற்றுத்தருமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தனியாரிடம் சிக்கிவிட்ட தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம்

தனியாரிடம் சிக்கியுள்ள தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் வட மாகாண கல்வியமைச்சின் நேரடி கண்காணிப்பில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

வட மாகாணத்தில் போதிய ஆசிரிய ஆளணியிருந்தும், வட மாகாண கல்வித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கோ, நிதிப்பிரமாண நடவடிக்கைகளுக்கோ உட்படுத்த முடியாத, எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்த முடியாத, தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் வினாத்தாள்களை தவணைப் பொதுப் பரீட்சைகளாக நடத்துவதற்கு, வட மாகாண கல்வித் திணைக்களம் அனுசரணை வழங்குவது சட்டவிரோதமான செயல்பாடாகும்.

இந்த சட்டவிரோத செயல்பாடுகளை முறையற்ற விதத்தில் ஊக்குவித்து, ஆசிரியர்களையும், பாடசாலைகளையும் தவறான விதத்தில் வட மாகாண கல்வித் திணைக்களம் வழிநடத்திவருகிறது.

எனவே, தனியாரிடம் சிக்கியுள்ள குறித்து தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் வட மாகாண கல்வியமைச்சின் நேரடி கண்காணிப்பில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் விளக்கமளிக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் மின்னஞ்சல் மூலம் வட மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)