திருவருட்சாதனம் பெறுகின்ற பிள்ளைகளுக்கு ஆயர் கூறும் அறிவரைகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மறைமாவட்டத்தில் பணி வாழ்வுக்கான தேவ அழைத்தல்கள் குறைந்து செல்வதால் இளைஞர், யுவதிகள் உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் பெறுகின்ற உங்கள் மத்தியில் இதற்கான அழைப்பின் குரல் கேட்கும்போது அதற்கு செவிமடுக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

பேசாலை பங்காகிய புனித வெற்றிநாயகி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18.09.2022) பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் அழைப்பை ஏற்று 71 இளைஞர் யுவதிகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையினால் உறுதிபூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கும் திருச்சடங்கில் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்;

பேசாலை பங்கில் இன்று (18.09.2022) இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்குவதற்கு இறைவன் சித்தம் கொண்டுள்ளார்.

இறைவனின் சித்தத்தின்படி நாம் வாழந்து கொண்டு இருக்கின்றோம். அவரே நமக்கு வாழ்வை தந்து கொண்டிருக்கின்றார்.

அவரே நம்மை வாழ வைப்பதால் அவரிடமிருந்தே அழைப்புக்களையும், பொறுப்புக்களையும் நாம் பெறுகின்றோம்.

இங்கு வீற்றிருக்கும் பிள்ளைகள் கடந்த மூன்று நான்கு மாதங்களாக இந்த உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெறுவதற்காக தங்களை தயாரித்துள்ளனர்.

பங்கு தந்தையினர், மறையாசிரியர்கள் மற்றும் அருட்சகோதரிகளினால் இவர்கள் மறையறிவை பெற்று மற்றும் பயிற்சிகளை பெற்றே இந்த அருட்சாதனத்தை பெறுவதற்காக தயார் நிலையில் இருக்கினறனர்.

ஆகவே, நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். இவர்கள் தூய ஆவியின் கொடைகளை பெறுவதற்கு இறைவன் சித்தம் கொண்டமைக்காக நாம் திருமுழுக்கு பெற்ற காலத்திலிருந்து இறைவனின் பிள்ளைகளாக வாழ்ந்து வருகின்றபோதும் எமது வாழ்க்கை எப்பொழுதும் புனிதமாக இருக்கின்றதா என்பது சொல்ல முடியாது.

நாம் எமது குற்றம், குறைகளினால் பாவங்கள் பல செய்து வருகின்றோம். இவற்றிலிருந்து எம்மை மீட்கவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.

ஒப்புரவு திருவருட்சாதனத்தின் மூலம் நீங்கள் மனமாற்றம் பெற்று வருவீர்கள் என இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆகவே, நாம் பொறுப்புள்ள பிள்ளைகளாக வாழ வேண்டும் என இறைவன் எம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

பிள்ளைகளே! அன்று நீங்கள் திருமுழுக்கு பெற்றபோது உங்கள் சார்பாக உங்கள் ஞான பெற்றோர் வாக்குறுதி வழங்கினர். இன்று நீங்கள் முழு உள்ளத்தோடு அதை புதுப்பிக்கின்றீர்கள்.

இதன் மூலம் நீங்கள் தூய ஆவியானவரில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இதனால், திருஅவையை ஏற்றுக்கொள்வதுடன், புனிதர்களின் உறவை விசுவசிப்பராகவும் அங்கீகரிக்கப்படுகின்றீர்கள்.

இன்றைய கால கட்டத்திலே திருச்சபையில் அங்கம் வகித்தவர்கள் சிலர் திருஅவையை வேறு வழியைப் பின்பற்றுகின்றனர்.

ஆகவேதான் நாம் எமது நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அத்துடன், திருஅவையின் வழிகாட்டலின் மூலம் நம் கடவுளின் மேல் நம்பிக்கையை மிகைப்படுத்தி, திருச்சபையின் அங்கத்தவராக எம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்

எனவே, எமது வாழ்க்கை இறைவனின் அருளுடன் ஒன்றித்து கலந்திருக்க வேண்டும். அது இறைதொண்டாகப் பிரதிபலிக்கும்.

நாம், ஒன்றிப்பு , பங்கேற்பு , பணி என மூன்றையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

மன்னார் மறைமாவட்டத்தில் தேவ அழைத்தல் அருகிக் கொண்டு போவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பணி வாழ்வுக்காக உங்களை இறைவன் அழைப்பார். அதை நீங்கள் உங்களினுள்ளே உணருவீர்கள். அவ்வழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

அப்போது உங்களுக்கு பரிசுத்த ஆவியின் கொடைகள் நிறைவாக கிடைக்கும். அவ்வருளை நீங்கள் பரிசுத்த ஆவியிடமே இரந்து கேளுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார், அருள் பொழிவார் என்று ஆண்டகை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கு ஆசீர் கூறினார்.

திருவருட்சாதனம் பெறுகின்ற பிள்ளைகளுக்கு ஆயர் கூறும் அறிவரைகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY