
posted 16th September 2022
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிதேசங்களின் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது
கடலரிப்பு மற்றும் காலநிலை சீரின்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த கடல் மீன்பிடி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக கரைவலை மீன்பிடியாளர்களுக்கு தினமும் பெருமளவில் மீன்பிடி இடம்பெறுவதனால் இந்த மாவட்டத்தில் மீன்விலை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக நெத்தலி, கீரி, பாரைக்குட்டி முதலான இன மீன்கள் தினமும் கரைவலை தோணிகளுக்கு பெருமளவில் பிடிபட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிடிபடும் மீன்கள் உள்ளுர் வாசிகளுக்கு குறைந்த விலையில் விற்பனையாகும் அதேவேளை, மீன்களை கருவாடாக உலர்த்தி கொழும்பு, கண்டி, மலையகப் பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைப்பதிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, நீண்ட காலமாக தொழில் வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக் கிடந்த பெருமளவான தொழிலாளர்கள் தற்பொழுது கடற்தொழிலை நாடிய வண்ணம் உள்ளதுடன் நாளாந்த வருமானத்தையும் பெற்று வருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)