
posted 1st September 2021

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகள் அவசியம். எனவே பொதுமக்கள் மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 4 மணி வரையான 24 மணி நேரத்தில் 375 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதேசமயம் 15 ஆயிரத்து 164 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 கிராமசேவையாளர் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர் நேற்று நடத்திய விசேட சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய ஒன்று கூடல்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். இதன்போது சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், தேவையற்ற நடமாட்டம் , ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும். எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.
அத்துடன், குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 2 இலட்சத்து 89 ஆயிரத்து 855 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர். தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. வயோதிபர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி போடப்படுகின்றது.
இதில் இராணுவத்தினரும் கைகோத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக் கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும். எமது இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் , சமூகத்தையும் பாதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

எஸ் தில்லைநாதன்