
posted 23rd September 2021

அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல்
மன்னாரில் அன்பர்களின் நிதி பங்களிப்பைக் கொண்டு மின் தகனம் நிலையத்தின் நிர்மானம் வெகு விரைவில் ஆரமப்பிக்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் கொரோனா தொற்றாளர்கள் மரணிக்கும் வேளையில் இவர்களின் சடலங்களை வெளி மாவட்டங்களுக்கே எடுத்துச் செல்வதில் மிக கஷ்டநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் கொண்ட குழுவினர் மன்னாரில் மின் தகனம் நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து இதற்கான தீவிர முயற்சியை அன்மையில் மேற்கொண்டனர்.
ஊடக சந்திப்பின்போது இது தொடர்பாக அரசாங்க அதிபரிடம் கேட்கப்பட்ட போது அவர் தெரிவிக்கையில்;
மன்னாரில் மின் தகனம் நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி எமக்கு பெரும் வெற்றியை அளித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக மன்னார் நகர சபையைக் கூறலாம். ஏனென்றால், அவர்கள்தான் இக் கட்டிடத்தை தங்கள் நிதியில் பூரணப்படுத்தி தருவதுக்கு எமக்கு சம்மதம் தெரிவித்துள்ளமை நீங்கள் அறிந்ததே.
இதைத் தொடர்ந்து இதற்கான இயந்திர தொகுதியை பெறுவதற்கான நடவடிக்கையை எம்மால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், இதற்கான நிதியானது இந்த சொற்ப காலத்தில் இது வரைக்கும் அன்பர்களிடமிருந்து 21 லட்சம் ரூபா எமக்கு அன்பளிப்பாகவும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிதியையும் பயன்படுத்தி வெகு விரைவில் இதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க இருக்கின்றோம் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ