
posted 30th September 2021

இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி. எஸ். பி பிளஸ் சலுகையை வழங்கக்கூடாதென ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம்
இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி. எஸ். பி பிளஸ் சலுகையை வழங்கக்கூடாதென ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதை நீங்கள் மிக தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும். இந்த தரநிலைகளை இலங்கை பூர்த்தி செய்யாமல், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்டால், அது சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசாங்கத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாது இவ்வாறு தம்மை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கூறியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
மேலும், தமிழர்களுக்கு நீடித்த - நிலையான தீர்வே தேவை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச எந்த அரசாங்கமும் தயாராக இல்லை என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜி. எஸ். பி. பிளஸ் வர்த்தக சலுகையை இலங்கைக்கு நீடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக வந்த ஐரோப்பிய ஒன்றிய குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள வீட்டில் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
இதன்போது, தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும், குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும் அரசாங்கங்கள் அனைத்தும் செயல்பட்டாலும், இந்த அரசாங்கம் அதில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. தொல்லியல் திணைக்களத்தின் மூலம் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தால் காணிகளை இழந்த மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மட்டக்களப்பு மேய்ச்சல் தரவை தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி வாழ்ந்த பண்ணையாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென நாம் நீண்டகாலமாக கேட்டு வருகிறோம். இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்துகின்றது. எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாட்டாக வைத்து அதை நீடிக்க அரசாங்கம் முயல்கிறது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவம், நடப்பு சூழலை தெளிவாக பிரதிபலிக்கிறது. தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கல் நிர்வாக அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து வழிகளிலும் சிங்கள மயமாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் எந்தவொரு பேச்சுக்கும் அரசாங்கம் தயாராக இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையை பெறுவதற்கான தரநிலைகள் பலவற்றை இலங்கை பூர்த்தி செய்யவில்லை. இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதெனில், அந்த தரநிலை முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி. எஸ். பி பிளஸ் சலுகையை வழங்கக்கூடாதென ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதை நீங்கள் மிக தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும். இந்த தரநிலைகளை இலங்கை பூர்த்தி செய்யாமல், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்டால், அது சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசாங்கத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நீண்ட விளக்கத்தை வழங்கினர்.
இந்த விவகாரங்களில் குறுகிய கால தீர்வு எதையாவது யோசிக்கலாமா என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்டனர்.
அவ்வாறு வழங்க வேண்டாம் எனக் கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நீடித்த, நிலையான தீர்வே தமிழ் தரப்பால் ஆராயப்படும், அதுவே தேவையானது என்றனர்.
இந்த விவகாரங்களில் தமக்கும் வரையறைகள் உள்ளன. நாளை அரசாங்கத்துடன் நடக்கும் மீளாய்வு கூட்டத்தில் இந்த விவகாரங்களை ஆராய்வதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்