
posted 21st September 2021
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 376 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 685 பேர் கொரோனாத் தொற்றினால் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகமாக இடம்பெறும் மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 50 பேர் இதுவரையில் வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
வடக்கில் சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி நிலை காணப்பட்டுள்ளமையால், 95 சடலங்கள் வெளி மாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டுள்ளன. வட மத்திய மாகாணத்தில் 79 சடலங்களும் கிழக்கு மாகாணத்தில் 16 சடலங்களும் மின் தகனம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் மட்டும் 228 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் செம்ரெம்பர் மாதத்தில் 20 நாட்களுக்குள் 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்