
posted 2nd September 2021
யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று முன் தினம் தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட முதியவர் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொவிட்-19 தொற்றுடன் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின்னர் உயிரிழந்தார்.
அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
உடுவிலில் 74 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவரது சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மின் தகனம் செய்யப்படும் என்று உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259ஆக உயர்வடைந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்