
posted 5th September 2021
பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களை மீட்பதற்கு நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை நிர்ணயம் செய்யும் நுகர்வோர் சட்டங்கள் போன்ற எத்தனையோ சட்டங்கள் இருக்கிறது. அந்த சட்டங்களை வலுவாக்காமல் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கையிலெடுத்துள்ளது. எமது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டமானது பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமான விளைவுகளை ஜனநாயகத்தில் உண்டு பண்ணும் என்பதால் அரசாங்கம் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்கும் இவ்வேளையில் இந்த அவசரகால சட்டத்தின் மூலம் முழு அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதை சாட்டாக வைத்துக்கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்த விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.
மேலும் அதிகாரங்களை இராணுவத்திற்கு அளித்து இப்போது நடைபெறுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஏனையவர்களின் ஜனநாயக போராட்டங்களை முடக்கி அவர்களை கைது செய்வதற்கான ஒரு அத்திவாரமாக இந்த சட்டம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கான முன்னெடுப்புகளை இந்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அவர்கள் செய்து வருகிறார்.
அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பார்க்கிலும் இந்த அவசரகாலச்சட்டம் மிகவும் ஆபத்தானது.
அன்றாடம் குரல் கொடுக்கின்ற எமது மக்களின் குரல்களை நசுக்குகின்ற ஒரு சட்டமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் 14 நாளுக்கு ஒரு முறை பாராளுமன்றத்தில் குறித்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட இந்த அரசாங்கம் இதை சர்வசாதாரணமாக வெற்றி கண்டு விடும். இந்த அவசர கால சட்டத்தால் எதிர்காலத்தில் எவரும் வாய் திறந்தால் பிரச்சனை என்ற நிலை உருவாகும்.
எனவே ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் இந்த அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது ஊடக சந்திப்பினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ