posted 14th September 2021
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கைக்கான சுவிஸ் தூதரிடம் வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறைமாவட்டங்களின் ஆயர்கள் கையொப்பமிட்டு இலங்கைக்கான சுவிஸ் தூதருக்கு அனுப்பிய கடிதத்தில் மேற்படி வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவுற்ற போதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ள வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் சர்வதேச நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள், இராஐதந்திர அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அவசியமாக இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சுவிஸ் தூதரகத்தினுடைய அலுவலகத்தின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்பதை ஆயர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளையில், கடந்த காலங்களில் சுவிஸ் அலுவலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளினால் இலங்கை நாடும் குறிப்பாக வடக்கு - கிழக்கு மக்களும் அடைந்த நன்மைகளுக்காக இந்தக் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையைத் தமது பூர்வீகமாகக் கொண்டு தற்போது சுவிஸ் பிரஜைகளாக இருக்கின்றவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் வாழுகின்ற நிலையில் அவர்களது சமூக, கலாசார, பொருளாதார தேவைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்தில் மீளத் திறக்கப்படும் சுவிஸ் தூதரக அலுவலகம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் குறிபிட்டுள்ள வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம், இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் விரைவில் மீளத் திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

எஸ் தில்லைநாதன்