posted 26th September 2021
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், அதன் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் கிளிநொச்சி குளம் அருகே ஐந்தடி பாய்ஞ்சானில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் ஐந்தடி பாய்ஞ்சான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முச்சக்கரவண்டி மோதித் தள்ளியது. விபத்தையடுத்து சாரதி முச்சக்கரவண்டியை நிறுத்தாது அங்கிருந்து வேகமாக செலுத்தியுள்ளார். இதன்போது முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், அதன் சாரதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
விபத்துக்கு இலக்கான யுவதி காயங்களுக்கு உள்ளானார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ் தில்லைநாதன்