
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
வேலங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த பொது மக்களினால் நேற்று வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள், வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரை அச்சுறுத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்கான நிரந்தர கிராம சேவையாளரை நியமிக்கக் கோரியும் கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பிரதேச செயலக பிரதான வாயிலை மறித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்களையும் வெளியேறவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், பின்னர் பிரதேச செயலக அலுவலகத்தினுள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், எமது பிரதேச செயலக பிரிவின் கீழ் 48 கிராம சேவகர் பிரிவில் 28 கிராம சேவகர்களே உள்ளனர். இதனால் ஒரு கிராம சேவகருக்கு நிரந்தர கிராம சேவகர் பிரிவும், பதில் கடமை பிரிவும் வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் கிராம சேவையளர் சர்வேந்திரன் பம்பைமடுவில் பதில் கடமையும் வேலங்குளம் கிராம சேவகர் பிரிவில் பதில் கடமையையும் மேற்கொண்டிருந்தார்.
மேலும் வேலங்குளம் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக குறித்த கிராம சேவகரை வேலங்குளம் கிராம சேவகர் பிரிவுக்கு நிரந்தரமாக நியமிக்கிறோம். அதன் பின்னர் அவருடைய கடமைக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதற்கு பிரதேச செயலகம் பூரண ஆதரவை வழங்கும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)