
posted 5th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி ஆரம்பமான மனித சங்கிலிப் போர்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ்பேசும் மக்களை இலக்குவைத்துத் தொடரும் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் நகர் வரையான போராட்டமாக இது நடைபெற்றது.
இந்தப் போராட்டம் மருதனார்மடம் சந்தியில் காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது. ஒரே நேரத்தில் கொக்குவில், கோண்டாவில் போன்ற பகுதிகளிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் ஏற்பாட்டிலும் ஆதரவுடனும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி என்பனவும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கின.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நீதிபதியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி. மணிவண்ணன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி கே. சயந்தன், து. ரவிகரன், க. சர்வேஸ்வரன், பா. கஜதீபன், எஸ். சுகிர்தன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க. சுகாஷ், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் உட்படப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)