
posted 1st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நீதித்துறையைச் சுதந்திரமாக இயங்க செய்வது அரசின் கடமை!
நீதித்துறையை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமை. இதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் எம். பியுமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா விவகாரம் குறித்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிபதிக்கு தொல்லைகள் கொடுக்கக்கூடாது. ஆனால் இலங்கையில் நடைபெறுவது இவ்வாறான செயல்பாடுகள் அல்ல. எல்லாமே ஒரு சிங்கள - பௌத்த சிந்தனையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆகவே, ஒரு தமிழருக்கு சார்பாக ஒரு தமிழ் நீதிபதி தீர்ப்பு கொடுத்தால் ஒரு முஸ்லிமுக்கு சார்பாக ஒரு முஸ்லிம் நீதிபதி தீர்ப்பு கொடுத்தால் சிங்களவர்கள் ஏதோ அவர்கள் தமிழர்களாக இருப்பதால்தான் இவ்வாறு தீர்ப்பு கொடுத்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்களே தவிர, சிங்கள நீதிபதிகள் சிங்களவர்களுக்கு சார்பாக நீதி கொடுக்கின்றார்கள் என்று சிந்திப்பதில்லை.
இதில் நான் தெரிவிப்பது நீதிபதிகள் சட்டத்தின்படி நடக்கத்தான் அவர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்திருக்கின்றோம். அவர்கள் இவ்வாறு தான் செய்கின்றார்களே தவிர, அதில் தமிழர்,சிங்களவர் என்று பாகுபாடு பார்த்து அவர்கள் இதனை செய்யவில்லை. இவ்வாறு நினைப்பது பிழையான ஒரு சிந்தனையாகும். இந்த சிந்தனையில்தான் இவ்வாறு இந்த நீதிபதிக்கு நடந்திருக்கின்றது என்பதுக்கு தெரிகின்றது.
இவ்வாறான செயல்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றில் அவரை திரும்ப வரவழைத்து, போதிய பாதுகாப்பு கொடுத்து அவரை மீண்டும் அதே பதவியை வகிக்க செய்யலாம். இது நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கின்றதா என்பது தெரியவில்லை.
ஆனால், அரசாங்கம் ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளை கட்டுப்படுத்தாவிட்டால் சிங்கள மக்களிடையேயும் இது மாதிரியான நிலைமைகள் ஏற்பட்டு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)