
posted 16th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இந்திய படைகளால் தமிழர் கொல்லப்பட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தாதீர்கள்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்திய படைகள் நடத்திய படுகொலை நினைவுநாளான ஒக்ரோபர் 21, 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரி இந்திய திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்;
தாங்கள் எதிர்வரும் ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வெளிக்கொணரும் தங்களின் இசையமைப்பில் உருவான பாடல்களையும், இசையையும் ஈழத்தமிழ் மக்களான நாங்களும் கேட்டு, இரசித்து மகிழ்கிறோம். அந்த வகையில் உங்களுக்கு ஏராளமான இரசிகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
பெரும் இனவழிப்பை தமிழினம் சந்தித்ததை நீங்கள் அறிவீர்கள். இந்த இனவழிப்பில் கொல்லப்பட்ட மக்களை நினைவேந்தல் செய்வதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள். இந்த நிலையில், தங்களால் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஒக்ரோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளான இதே தினங்களில், 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர்கள், தாதியர்கள், உட்பட நோயாளர்கள், பொதுமக்கள் இந்திய அமைதிப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை வருடாவருடம் நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்த துயர்மிகுந்த நாட்களில், நினைவேந்தல்களூடாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நாம் நம்புகிறோம். இதனை மடைமாற்றி இந்த நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக மாற்றியமைக்க முயலும் இலங்கை - இந்திய அரசுகள் தங்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்.
இந்த நினைவேந்தல் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ கலந்து கொள்வதானது, அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயல்பாடு என்பதுடன், பேரினவாதத்தால் இன்றும் நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு துணைநிற்கும் செயல்பாடாகவும் அமைந்துவிடும்.
மேற்படி நினைவேந்தல்களூடாக தமிழினம் அடுத்த சந்ததிக்கு கடத்த முயலும் தமிழின விடுதலை வேட்கைக்கும் எதிரான செயல்பாடாகவும் அமையும். தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இறந்தவர்களை நினைவேந்தும் உரிமையை சர்வதேச சட்டங்களும், இலங்கை சட்டங்களும் அனுமதித்துள்ள போதும், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு சட்டவிரோதமாக தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தரப்புகள், நினைவேந்தல்களுக்கு சட்டரீதியாக தடைகளை ஏற்படுத்த முடியாதபோது, இந்த நாட்களைத் தெரிவு செய்து களியாட்ட தினங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முயற்சிகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகர் தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள், தமிழ் மக்களின் வலிகளையும், வேதனைகளையும் உணர்ந்துகொண்டு இழப்புகளுக்கும், தியாகங்களுக்கும் மதிப்பளித்து குறித்த திகதிகளை மாற்றி, பொருத்தமான வேறொரு திகதியில் தங்கள் நிகழ்வை மாற்றியமைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)