
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஆயிரம் மாணவர்களுக்கு இலவச கணனி கற்கைநெறி!
யாழ்ப்பாணத்தில் இலவச கணனி கற்கைநெறியை வழங்கும் விதமாக மை ட்ரீம் அக்கடமி (My Dream Academy) ஞாயிறு (22) திறந்து வைக்கப்பட்டது. தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.
யாழ். மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும் இலவசமான கோடிங் (Coding) கற்கைநெறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரின் பாரியார் மீனாட்சி சந்தோஷ், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சிறீ சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டு கற்கைநெறிகளை ஆரம்பித்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் இ. த.ஜெயசீலனும் பங்கேற்றார்.
இக்கற்கைநெறிகளை யாழ். மாவட்டத்தில் வழங்குவதற்காக அங்கஜன் இராமநாதனின் “என் கனவு யாழ்” அறக்கட்டளையுடன் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேராவின் டி. பி. எடியுகேசன் (D P Education) அறக்கட்டளை கைகோத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட சுமார் 1200 மாணவர்கள் வருடாந்தம் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முதலாவது மை ட்ரீம் அக்கடமி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)