
posted 2nd October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முல்லைத்தீவு நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது!
நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது. இந்த மோசமான நீதி பிறழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது. தொடர்ச்சியாக இந்த விடயத்தை உலகத்தில் பல நாடுகள் திரும்பி பார்க்கும் வண்ணமாக பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க இருக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளையில் மக்களுக்கான குடிதண்ணீர் விநியோக திட்ட நிகழ்வில் நேற்று (01) ஞாயிறு பங்கேற்றியபோதே சுமந்திரன் எம். பி. மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், தனது கடமையை செய்தமைக்காக அச்சுறுத்தப்பட்ட பிறகு அவர் உயிருக்கு ஆபத்து என்றும், தனக்கு பெரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் சொல்லி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வந்துள்ளேன்.
நீதித்துறை எந்தவிதமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதன் வெளிப்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தில்தான் பெரிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதித்துறை மோசமாக பாதிக்கப்படுகின்றது. நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது என்பது எங்கள் நாட்டின் சரித்திரத்துடன் ஒன்றிய விடயம். புதிய விடயமல்ல. ஒரு சில நீதிபதிகள் அழுத்தங்கள் காரணமாக பதவிகளை விட்டு நாட்டைவிட்டு வெளியேறிய தருணங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
இந்த தடவைதான் முதல் தடவையாக அப்படியாக வெளியேறுகின்ற ஒருவர் வெளிப்படையாக அதனை சொல்லி அறிவித்துவிட்டு பதவிகளை இராஜினாமா செய்து நாட்டை விட்டு போயுள்ளார்.
நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததை இன்று உலகளாவிய ரீதியில் மறுக்கமுடியாத ஓர் அறிவிப்பாக இந்த செயற்பாடு அமைகின்றது.
அவருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்பது எவரும் மறுக்கமுடியாத விடயம். அவருக்கு கடந்த மாதங்களில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது இந்த இடத்திலும், வேறு இடத்திலும் போராட்டங்கள் நடந்தன. பாராளுமன்றத்தில் பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி சரத் வீரசேகர உரையாற்றி இருக்கின்றார் என்று நான் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி இருந்தேன். பாராளுமன்ற ஒழுங்குகள் பற்றிய குழுவுக்கு அது பாரப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது. இந்த மோசமான நீதி பிறழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது. தொடர்ச்சியாக இந்த விடயத்தை உலகத்தில் பல நாடுகள் திரும்பி பார்க்கும் வண்ணமாக பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)