
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக உயர்வு
இலங்கை போக்குவரத்துச் சபையின் பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான துரித அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.
பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக தரமுயர்த்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் அமைச்சு மட்டத்தில் எட்டப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக பொத்துவில் பஸ் டிப்போவில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திக்கென பணம் ஒதுக்குவதில் பல சிரமங்கள் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த காலப் பகுதியில் பொத்துவில் பஸ் டிப்போ அமைந்துள்ள நிலத்தின் சட்ட ரீதியான உரிமை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குறித்த பஸ் டிப்போவின் துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான முதற்கட்ட நிதியாக சுமார் 60 மில்லியன் ரூபா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பின் வேண்டுகோளுக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிகுதிப் பணம் எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் உள்வாங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முஷாரப் எம்.பி. தெரிவித்தார்.
நவம்பர் முதலாம் வாரத்தில் பொத்துவில் உப பஸ் டிப்போ பிரதான டிப்போவாக தர்முயர்த்தும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெற இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)