
posted 12th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுகாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய பணிமனைக்குட்பட்ட சுகாதார நிறுவனங்களின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சுகாதார கழகங்களில் உள்ளவர்களுக்கு சுகாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த செயற்றிட்டத்தின்கீழ் அமைந்த தேசிய ரீதியானதும், பிராந்திய ரீதியானதுமான முதலாவதான இச்செயலமர்வில் நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை சுகாதார கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார தாதியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.பீ. முஹம்மட் சில்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம். பஸால், பிராந்திய பொதுச்சுகாதார மற்றும் தரமுகாமைத்துவ பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். ஹில்மி, வாய்ச்சுகாதார வைத்திய நிபுணர் டொக்டர் எம்.எச்.கே. சரூக், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது கோட்ட மட்டத்திலான பாடசாலை சுகாதார கழக மேம்பாட்டுக் குழு (Divisional Level School Health Club Committee) ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. இக்குழு மாதாந்தம் ஒன்றுகூடி தொடர் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலைகளில் உள்ள சுகாதார கழகங்களை ஒழுங்கமைத்து அதனை வலுவூட்டி மாணவர்கள் மத்தியில் சுகாதார பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)