
posted 28th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள்
சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
2024ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழனன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இலங்கை இயற்கை அம்சங்களுடன் கூடிய, காலநிலை வலயங்கள், இயற்கை வளம் என்பவற்றை நிறைவாக கொண்ட அழகிய நாடாகும். பெறுமதியான கனிய வளங்களும் உலகில் இயற்கை அனர்த்தங்கள் குறைந்த நாடாகவும் இலங்கை காணப்படுகிறது.
எமது நாட்டின் மிகப் பெறுமதியான வளமாக காணிகளே காணப்படுகின்றன. சனத்தொகை அதிகரிப்பினால் காணிகளுக்கான பெறுமதியும் அன்றாடம் அதிகரிக்கிறது. நகரங்களை அண்டிய பகுதிகளிலும் அதேநிலை காணப்படுகிறது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் வசமாக பெறுமளவான காணிகள் உள்ளன.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் உள்ளன. அவற்றில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களும் உள்ளன. நகர நிர்மாணம் மற்றும் நகர விருத்தி திட்டங்களும் காணப்படுகின்றன. அத்தோடு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளுக்கு அவசியமான காணிகளும் உள்ளன.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியமான நல்ல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வருமானம் ஈட்டும் வகையில் காணிகளை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மெகலம் வீதியின் பெறுமதியான காணிகளை குறிப்பிட முடியும்.
கண்டி நகரம், போகம்பரை சிறைச்சாலை, நுவரெலியா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகள் பேர்ச்சஸ் முதல் ஏக்கர் அளவிலான காணிகள் காணப்படுகின்றன. சில காணிகள் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கவில்லை. அவற்றை தேடியறியும் பணிகள் ஆரம்பிக்கப்படும். போகம்பர சிறைச்சாலை பகுதியை மையயப்படுத்திய புதிய முதலீடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரிய நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வீடமைப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் இயலுமை கிட்டியுள்ளது. 2024 வரவு செலவு திட்டத்துடன் அந்த திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம்.
சில வேலைத்திட்டங்களில் மோசடிகள் நிகழ்கின்றன. அவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுக்கும்.
அதேபோல் சிறு மற்றும் மத்திய தர வருமானம் ஈட்டும் மக்களுக்காக கொழும்பில் 05 வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்காக மொத்தமாக 350 டொலர் மில்லியன்கள் செலவாகும். ஜனாதிபதியின் அண்மைய சீனாவிற்காக விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அத்தோடு கொழும்பில் நீர் நிரம்புவதை தடுப்பதற்கு தாழ்நில அபிவிருத்தி அதிகார சபையினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கடல் தாவரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன.
வௌ்ளப் பாதுகாப்பிற்கான மக்களிடத்திலிருந்து பெறப்பட்ட காணிகள் அழிவடைகின்றன. காணிகளை கையகப்படுத்தும்போது வழங்கப்பட வேண்டிய நட்டயீடுகளும் சிலருக்கு வழங்கப்படவில்லை. அந்த நிலைமைக்கு மாறாக கொழும்பு நகரில் பிரதான காணிகளை பெற்றுக்கொள்ளும்போது அறிவியல் முறைமையொன்றை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கும் பயணத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உயரிய பங்களிப்பை வழங்கும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)