அம்மன் சிலையை அகற்ற நீதிமன்று இடைக்கால தடை

அம்மன் சிலையை அகற்ற நீதிமன்று இடைக்கால தடை

கல்முனை மாநகரை அடுத்துள்ள நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்ற கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு விதித்துள்ளது.

கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இந்த வழக்கை கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

"கடந்த 400 வருடங்களாக நடைபெற்று வந்த பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு மாறாக நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்திலிருந்து அம்மன் சிலையை சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குக் கொண்டு செல்வதற்கு பதிலாக, பிரதிவாதிகளால் சட்டவிரோதமாக அனுமதியின்றி நற்பிட்டிமுனையில் கட்டப்பட்ட புதிய ஆலயத்துக்கு கொண்டு செல்ல பிரதிவாதிகள் தீர்மானித்தனர்.

இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், இதனை தடை செய்யுமாறு கோரி இந்த வழக்கு சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவினர் தாக்கல் செய்யப்பட்டது.

கணேசர் ஆலய தலைவர் தம்பிராசா ரவிராஜ் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த கல்முனை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.எம். ரியால், சிலையை மாற்ற இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளார் என்று, வழக்கு விசாரணையில் ஆஜராகியிருந்த பிரபல சிரேஷ்டசட்டத்தரணி ஏ. ஆர் .எம். கலீல் தெரிவித்தார்.

இந்தவழக்கு பதில் நீதிபதி எ.எம் .ரியால் தலைமையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது சட்டத்தரணி கலீல், அம்மன் சிலையை அங்கிருந்து கொண்டுசெல்லும்போது சேனைக்குடியிருப்பு மற்றும் நற்பிட்டிமுனை மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டு அதுவே கலவரமாக மாறி, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே இதனை தடை செய்யுமாறு கோரி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

சட்டத்தரணி கலீலின் வாதம், சத்திய கூற்று மற்றும் ஆவணங்களையும் அவதானித்த நீதிபதி "இடைக்கால தடை உத்தரவு ஒன்று வழங்கப்படும் வரை நற்பிட்டிமுனை சிறீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற அம்மன் சிலையானது பிரதிவாதிகளோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களாலோ அல்லது வேற வேறெவராலுமோ அங்கிருந்து அகற்றப்படக்கூடாது என்றும், குறித்த அம்மன் சிலையானது நற்பிட்டிமுனை சிறீ கணேசர் ஆலயத்திலேயே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அம்மன் சிலையை அகற்ற நீதிமன்று இடைக்கால தடை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)