
posted 9th October 2022
கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன்
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் 07.10.2022 மாலை இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்குச் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவருக்கு, வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பள்ளிவாசலுக்கு அண்மையாக அமைந்துள்ள புடைவைக் கடை ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கிண்டலடித்ததுடன், குறித்த பெண்ணுடன் பேச முனைந்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த சம்பவத்தை அவ் இளம் குடும்ப பெண் தனது கணவருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு வந்த கணவர் தனது மனைவியையும் அழைத்துச் சென்று கிண்டலடித்த இளைஞர் வேலை செய்யும் புடைவைக் கடைக்குள் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து, குறித்த இளம் குடும்ப பெண்ணின் கணவன் குறித்த இளைஞன் மீது கத்தியால் குத்தியுள்ளார்.
அதன்பின் அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றபோது அவ்விடத்தில் நின்றவர்கள் அவரை விரட்டிப் பிடித்து, வவுனியா பொலிஸாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரிய வகை அரணை இனம்
வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று சனிக்கிழமை (08) சென்ற ஒருவர் “தாசியா ஹாலியானஸ்” என்ற இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் ஒன்றை அவதானித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இதேவேளை 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் அரசாங்கத்தால் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், முத்திரை ஒன்றிலும் இதன் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக் காலப்பகுதியில் ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இதே போன்ற அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருளை கடத்தியவர்களைக் கைது செய்த நான்கு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்றம்
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (07) தொடக்கம் அமுலாகும் வகையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.
வட மாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தால் குறித்த இடமாற்ற கடிதங்கள் கடந்த வியாழக்கிமை (06) மாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இடமாற்றம் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மைய நாள்களில் ஆறு தடவைகள் போதைப் பொருள் வியாபாரிகளை தொடர்ச்சியாக கைது செய்துள்ளனர் என பொதுமக்கள் கூறினர்.
இடமாற்றத்துக்கு ஒருநாள் முன்னரும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப் பொருளை கடத்தி வந்து விநியோகம் செய்யும் இருவரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாக்குமூலங்களை பதிவு செய்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வருக்கே இவ்வாறு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY