தொடரும் மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு

மன்னார் சதொச மனித புதை குழியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு காணாமல் போன அலுவலகம் முன்னையப் போன்று நிதி அனுசரணை வழங்க திட்டம் கொண்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அடுத்த தவணையில் இவ் அகழ்வுப் பணி எப்பொழுது ஆரம்பிக்கப்பட வேண்டும் என பொலிசார் மன்றுக்கு அறிக்கையிட வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மன்னார் நகருக்குள் கண்டு பிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் சமட் கிபத்துல்லா முன்னிலையில் திங்கள் கிழமை (17.10.2022) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கு தொடர்பாக ஏற்கனவே மன்று இப் புதைகுழி அகழ்வு பணியில் தலைமை தாங்கி முன்னெடுத்த சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ச அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில் இன்று (17) திங்கள் கிழமை இவர் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

18.05.2022 அன்று இது தொடர்பான அறிக்கை ஒன்றை தான் மன்றுக்கு அனுப்பி வைத்திருந்ததாக சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ச மன்றில் தெரிவித்திருந்தார்.

ஆத்துடன் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டதுக்கு அமைவாக இப் புதை குழியை மீண்டும் அகழ்வு செய்வதற்கு என்னென்ன தேவை என்றும்,
ஏந்தெந்த திணைக்களங்களின் உதவிகள் தேவைப்படுகின்றது, அதற்கான செலவுகளின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இவ் அறிக்கை தொடர்பாக நீதிமன்றம் மன்னார் பொலிசாருக்கு ஒரு உத்தரவை வழங்கி இருந்தது.

அதாவது, இச் சதொச மனித புதை குழி அகழ்வுப் பணி மீண்டும் எப்பொழுது ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வழக்கில் தெரிவிக்கப்பட வேண்டும் என மன்று பொலிசாருக்கு கட்டளையிட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக இம் மன்றில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி திருமதி புராதினி நீதிமன்றில் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இவ் அகழ்வு பணிக்காக உதவும் நோக்குடன் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான திட்டம் இருப்தாகவும், இதற்கான கோரிக்கையொன்று விடும் பட்சத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரி்ன் அலுவலகம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கமைய இவ் அகழ்வு பணிக்கான நிதி அனுசரனை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ் வழக்கை நவம்பர் மாதம் 30ந் திகதி (30.11.2022) அழைக்கும் போது இச் சதொச புதைகுழியை எப்பொழுது ஆரம்பிப்பது என தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என உத்தரவு இட்டுள்ளது என வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் ஆஜராகிவரும் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிடத்துக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கட்டிட வேலை இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்களுக்கான அகழ்வு வேலைகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்லையில் இடம்பெற்று வந்த நிலையில், மீண்டும் இவ் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ் வழக்கின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் மற்றும் றனித்தா ஞானராஜா ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி புராதினியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் முன்னிலையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)