
posted 14th October 2022

எம்.ஏ.சி.எம். றியாஸ்
கல்முனையில் இருந்து மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்று, காணாமல் போயிருந்த 04 மீனவர்களும் 15 நாட்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கின்றனர் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் - 26ஆம் திகதியன்று ஆழ்கடலுக்கு சென்றிருந்த கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம். மஜீட் (வயது 55), சி.எஸ்.எச்.எம். நிப்றாஸ் (வயது 36), ஏ.பி. கபீர் (வயது 50), எம்.என். ஹில்மி (வயது 33) ஆகிய மீனவர்கள் பல நாட்கள் கடந்தும் கரை திரும்பாத நிலையில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் தேடப்பட்டு வந்தனர்.
இவர்கள் சென்ற படகின் ஜி.பி.எஸ் தொழிநுட்ப கருவி பழுதடைந்தமையினால் திசை மாறி பயணித்துள்ள நிலையில், வேறொரு படகில் சென்ற மீனவர்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து அப்படகு மீட்கப்பட்டு, வாழைச்சேனை இறங்குதுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த மீனவர்களும் பாதுகாப்பாக கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இம்மீனவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்களாக இவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படை, மீன்பிடி திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் படகுகள் சங்கம் உள்ளிட்ட தரப்புகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)