
posted 18th October 2022
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கரைவலை சம்மாட்டி மார்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நேற்று (17) அதிகாலை 04.00 மணியளவில் படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு மீனவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
காலை 06.00 பின்பே தான் கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற சட்டம் காணப்படுகின்ற போதும் கட்டைக்காடு சம்மாட்டி ஒருவர் தனது கரைவலையை சரியாக 4.20 மணியளவில் கடலில் வீசியுள்ளார்.
இதனால் எதிர்பாராத குறித்த மீனவர்கள் கரைவலையில் சிக்கியதுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
நங்கூரம், கத்தி போன்ற ஆபத்தான பொருட்களோடு பலமாக அடிபட்டதில் மீனவர் ஒருவருக்கு பலத்த காயங்களுடன் மூக்கு, வாயால் இரத்தமும் கசிய தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
காலை 06.00 பின்பே கரைவலைக்கு அனுமதி உள்ள போதும் குறித்த சம்மாட்டியின் செயல் கண்டிக்கப்பட வேண்டுமென மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாதிப்புக்குள்ளான மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டைக்காடு மீனவ சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட அதேவேளை உரிய தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிசில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தொடர்ச்சியாக குறித்த பகுதியில் சட்டத்தை மீறிவரும் கரைவலை சம்மாட்டிமார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி சிறு தொழிலாளிகள் கேட்டு கொள்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)